மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று வனவேங்கைகள் கட்சியினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்:நா.தங்கரத்தினம். 
தமிழகம்

வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள் கோரி மதுரையில் வனவேங்கைகள் கட்சியினர் போராட்டம்

சுப. ஜனநாயகசெல்வம்

மதுரை: குறவர் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி இன்று வனவேங்கைகள் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் பெண்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பேருந்து நிறுத்தம் அருகில் 6-வது வார்டுக்குட்பட்ட சந்தைத்தெரு பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக குறிஞ்சி திணை மக்களான குறவர் பழங்குடி மக்கள் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை, கழிவுநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் சூழல் உள்ளது.

இங்கு அடிப்படை வசதிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும் வனவேங்கைகள் கட்சி சார்பில் குடியேறும் போராட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ப.சத்யா தலைமையிலும், கா.நவநீதன் முன்னிலை வகித்தனர். இதில், மாநில பொதுச்செயலாளர் ப.உலகநாதன், மாவட்டச் செயலாளர் முத்து ஆகியோர் பேசினர். இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT