கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக் கோரி அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று தீக்குளிக்கமுயன்றவர்களை போலீஸார் தடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 
தமிழகம்

கேங்மேன் பணி வழங்க கோரி மின்வாரிய தலைமையகம் முன் தீக்குளிக்க முயற்சி

செய்திப்பிரிவு

சென்னை: மின்வாரியத்தில் ‘கேங்மேன்’ எனப்படும்களப்பணியாளர்கள் பணியிடத்துக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 800-க்கும் மேற்பட்டோர், பணி வழங்கக் கோரி சென்னைகொளத்தூரில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிடமுயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பெரவள்ளூர்போலீஸார், போராட்டத்தை ஒருங்கிணைத்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்ற தகவலின் அடிப்படையில் காலைமுதலே மின்வாரிய தலைமையகத்தைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். கடும் சோதனைக்குப் பிறகே பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் காலை 10 மணியளவில் 80-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். அப்போது ஈரோட்டைச் சேர்ந்த தாமோதரன் என்பவருக்கு வலிப்பு ஏற்பட்டது.

உடனடியாக காவலர் ஒருவர் தாமோதரனை தூக்கிச்சென்று காவல் துறை வாகனம் மூலமாகஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். கைதான அனைவரையும் புதுப்பேட்டையில் உள்ள திருமணமண்டபத்தில் போலீஸார் அடைத்தனர்.

இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த சிவமணி, ஈரோட்டைச் சேர்ந்த மூர்த்தி ஆகிய இருவரும் கையில் கொண்டு வந்தடீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அந்த 2 பேரையும் போலீஸார் தடுத்து, கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதுபாதிக்கப்பட்டவர்கள், தங்களை வாழவும் விடாமல், சாகவும் விடாமல் தமிழக அரசு தடுப்பதாகக் கூறி வருந்தினர்.

800 பேர் மீது வழக்கு: இதனிடையே, கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேற்று முன்தினம்கொளத்தூரில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் தடுத்து அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் மீது 4 பிரிவுகளின்கீழ் பெரவள்ளூர் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

போராட்டத்தை தூண்டிவிட்டதாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சின்னையன் (28), திருவண்ணாமலை போளூர் சுரேஷ்குமார் (35), திண்டுக்கல் வாழக்காபட்டி விஜயகுமார் (30), சென்னை திரு.வி.க நகர் ஜெயக்குமார் (33) ஆகிய 4 பேரை கைதுசெய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT