முதலை இழுத்துச் சென்ற கூலித்தொழிலாளியை பழைய கொள்ளிடம் ஆற்றில் தேடிய தீயணைப்பு மற்றும் வனத்துறையினர். 
தமிழகம்

குமராட்சி அருகே முதலை கடித்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது காட்டுக் கூடலூர் கிராமம். இந்தக் கிராமத்தை ஒட்டி பழைய கொள்ளிடம் ஆறு செல்கிறது நேற்று மதியம் இதே ஊரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி சுந்தர மூத்தி (55) என்பவர், தனது மாட்டைக் குளிப்பாட்ட ஆற்றுக்கு வந்தார்.

மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது, திடீரென முதலை ஒன்று அவரை கடித்து தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. கரையில் இருந்து இதைப் பார்த்தவர்கள் குமராட்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிதம்பரம் வனத்துறையினர் அங்கு வந்து மீனவர்கள் உதவியுடன் சுந்தரமூர்த்தியை தேடினர்.

சுமார் ஒரு மணி தேடலுக்குப் பின்னர் மீனவர் வலையில் இறந்த நிலையில் சுந்தரமூர்த்தியின் உடல் சிக்கியது. பலத்த காயங்களுடன் இருந்த சுந்தர மூர்த்தியின் உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டது. தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பிரேத பரிசோதனைக்காக உடலை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT