கிறிஸ்துமஸ் பண்டிகை சென்னையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் சிறப்பு திருப்பலி மற்றும் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த திருநாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். அதன்படி சென்னையில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து தேவாலயங்களுக்கு சென்று விசேஷ பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தும் கேக் கொடுத்தும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
சென்னை சாந்தோம் பேராலயத்தில், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி நிறைவேற்றினார். இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சர்ச்), ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெற்றது. குழந்தை இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை நினைவுகூரும் வகையில் ஆலயங்களில் கிறிஸ்து மஸ் குடில்கள் அமைக்கப்பட் டிருந்தன.
சிஎஸ்ஐ திருமண்டல தலைமை ஆலயமான கதீட் ரல் பேராலயம், வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் குட்ஷெப்பர்டு ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனைகளில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொரு வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். ஆலயத்துக்கு வந்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இதனால், சென்னையில் உள்ள முக்கிய தேவாலயங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னை புறநகர் பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தாம்பரம் பாத்திமா அன்னை ஆலயம், பெருங்களத்தூர் குழந்தை இயேசு ஆலயம், ஊரப்பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம், கூடுவாஞ்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், காட்டாங்குளத்தூர் புனித லூர்து அன்னை ஆலயம், மறைமலை நகர் தூய விண்ணரசி அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.