தமிழகம்

ஈரோடு | 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோட்டில் 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 80 வயது மூதாட்டியை, தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

ஈரோடு, சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் வசித்துவரும் பகுதியில் 100 அடி ஆழமுள்ள பொதுகிணறு உள்ளது. இந்த கிணற்றில் 10 அடி ஆழத்துக்கு நீர் உள்ளது. நேற்று காலை, கிணற்றின் அருகே சென்ற மூதாட்டி வள்ளியம்மாள், அதில் தவறி விழுந்தார். கிணற்றில் இருந்த கயிறை பிடித்து கொண்டு அவர் கூச்சலிட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே வந்தவர்கள், வள்ளியம்மாள் கயிறைப் பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டனர். இதையடுத்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் கலைச்செல்வம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து, கயிறு கட்டி இறங்கி, வள்ளியம்மாளை உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT