தருமபுரி / சேலம்: மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, சேலம் ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக முதல்வர் இன்று (15-ம் தேதி) தொடங்கி வைக்கும் முன்பாகவே, திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 தொகை வந்து சேரத் தொடங்கியுள்ளது.
இது, இத்திட்டப் பயனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பயனாளிகளின் வங்கிக் கணக்கை சைபர் கிரைம் குற்றவாளிகள் சிலர் குறிவைத்து பணம் பறிக்க முயற்சிக்க வாய்ப்புள்ளது. எனவே, வங்கி தரப்பில் இருந்து பேசுவதாக யாரேனும் செல்போனில் தொடர்பு கொண்டு, ‘ஓடிபி’ எண் கேட்டால் தர வேண்டாம்.
இத்திட்டத்திற்காக ஓடிபி எண் எதுவும் கேட்கப்படுவதில்லை. உரிமைத் தொகை வங்கிக் கணக்குக்கு வர ஒருசிலருக்கு தாமதம் ஏற்படலாம். அதற்காக யாரும் கவலையடைய வேண்டாம். தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கண்டிப்பாக உரிமைத் தொகை வந்து சேரும். எனவே, அதுவரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.