தமிழகம்

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: நடப்பு ஆண்டில் இதுவரை 1,175 பேர் பாதிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில், டெங்குவால் இம்மாதத்தில் இதுவரை 44 பேர் பாதிக்கப்பட்டு, அதில் இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டில் மட்டும் டெங்குவால் 1,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்தாண்டை விட அதிகம். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மீனரோஷினி, காயத்ரி ஆகிய இருவர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய சூழல் தொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் நடப்பாண்டில் ஜனவரி முதல் இதுவரை டெங்குவால் 1,175 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டில் இந்த காலகட்டத்தில் 792 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். நடப்பு செப்டம்பரில் மட்டும் 44 பேர் பாதிக்கப்பட்டு, அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை தாமதமாக எடுத்தது தான் இறப்புக்கு முக்கிய காரணம். நடப்பாண்டில் டெங்கு அதிகமாக காணப்படுகிறது. மழைக் காலம் முன்பே ஆரம்பித்ததும், தண்ணீர் தேங்கியதும், அதனால் ஏடிஎஸ் கொசு முட்டையிட்டு பரவியதும் ஓர் காரணம். தண்ணீர் தேங்கியிருப்பதை சரி செய்வது தான் இதைத் தடுக்க முக்கியமான பணி. வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

ஃபிரிட்ஜ் பின்னால் உள்ள தண்ணீரை உடனுக்குடன் அகற்றுவது அவசியம். வீட்டில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கியிருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டெங்கால் இறந்த மேட்டுப்பாளையம், குருமாம் பேட் பகுதிகளில் சுகாதாரத் துறை, நகராட்சி தரப்பில் கொசு மருந்து அடித்துள்ளோம். அப்பகுதிகளில் வீடுகளில் டெங்கு பாதிப்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம்.

புதுச்சேரியில், நிபா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை. மாஹே பகுதிகள், கேரளத்தில் இருந்து வருவோரையும், ரயில்வே நிலையங்களில் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளோம். டெங்குகாய்ச்சல் சிகிச்சை வார்டு அமைத்துள்ளோம். அதில் இருவர் சிகிச்சைபெற்று வருகின்றனர். மழைக்காலம் பரவலாக இருப்பதால் கூடுதலாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. டெங்கு வராமல் இருக்க தண்ணீர் தேங்காமல் இருக்க பார்த்து கொள்வது தான் முக்கியம்" என்றார்.

அதேபோல் சிக்குன்குனியாவில் நடப்பாண்டில் ஜனவரி முதல்தற்போது வரை 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. நடப்பு மாதத்தில் மட்டும் இருவர் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT