தூத்துக்குடி: தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கடந்த 2001-2006 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதா ராதா கிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு உதவுவதற்காக தங்களையும் சேர்க்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தரப்பிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றங்களில்
இ-பைலின் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.