சென்னை: சனாதனம் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து ‘இண்டியா’ கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து கவன ஈர்ப்புக்காக பலர் பேசி வருகின்றனர். இதுபோன்ற எதிர்ப்புகளை பெரியார், அம்பேத்கர் என பலரும் சந்தித்துள்ளனர். அமைச்சர் முன்வைத்தது சனாதன சக்திகளுக்கு எதிரான கருத்தே தவிர, இந்துக்களுக்கு எதிரான கருத்தல்ல. சனாதன சக்திகள் என்றால் சமூகத்தில் நிலவும் பாலின, சாதியப் பாகுபாட்டை நியாயப்படுத்துபவர்கள். பாகுபாடுகள் களையப் பெற்று ஜனநாயகம் வளர வேண்டும் என விரும்புகிறோம்.
இக்கருத்துக்கு எதிராக பிரதமரே பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. அவரும் தேர்தலையொட்டித்தான் பேசியுள்ளார். ‘இண்டியா’ கூட்டணியை பிளவுபடுத்த வேண்டும், கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே முரண்பாட்டை உருவாக்கி, இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கனவு காண்கின்றனர். அவர்களின் கனவு பலிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.