சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குஎதிராக இந்து முன்னணிஅமைப்பினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்து முன்னணி, பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்துமுன்னணி அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செய்தித் தொடர்பாளரும், மாநகர தலைவருமான ஏ.டி.இளங்கோவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் த.மனோகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபுவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.