மதுரை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் காரணமாக, சுப.உதயகுமாருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸை திரும்ப பெற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த சுப.உதயகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: துருக்கியில் 2022-ல் நடைபெற்ற சர்வதேச இதழியல் மாநாட்டில் பங்கேற்க எனக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக, எனக்கு எதிரானலுக்-அவுட் (தேடப்படும் குற்றவாளி) நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தபோது லுக்-அவுட் நோட்டீஸ் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. லுக்-அவுட் நோட்டீஸை திரும்ப பெற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரருக்கு எதிராக 2013-ல் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மனுதாரர் மீது 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 15 வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என்றார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் மீது நீதிமன்றத்தில் பிடியாணை நிலுவையில் இல்லை. மனுதாரர் வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகி வருகிறார். இதனால் மனுதாரருக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸை நெல்லை மாவட்ட எஸ்பி திரும்ப பெற வேண்டும் என உத்தரவிட்டார்.