தீக்குளிக்க முயன்ற வேளாங்கண்ணி 
தமிழகம்

அரசு விழாவில் தீக்குளிக்க முயன்ற பெண் - கந்துவட்டி கொடுமை என புகார்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பங்கேற்ற அரசு விழாவின் போது பெண் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கந்து வட்டி கேட்டு கொடுமைப் படுத்துவதால் தீக்குளிக்க முயன்றதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பங்கேற்று வேளாண் கருவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் இருந்து திடீரென்று வந்த பெண் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

உடனே அவரிடமிருந்து மண்ணெண்ணெயை கேனை அங்கிருந்த விவசாயி ஒருவர் பறித்தார். அந்தப்பெண்ணை போலீஸார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகர் சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலாஜி மனைவி வேளாங் கண்ணி (40) என்பது தெரியவந்தது.

இவர் அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்ததாகவும், அவர்கள் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், எனவே தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு விழாவில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT