தமிழகம்

நிலவில் ஆக்சிஜன், சல்ஃபர் தனிமங்கள்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் பாகம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரைஇறங்கியது.

இதன்மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது. சில மணி நேரங்களுக்குப் பிறகு லேண்டரில் இருந்த ‘பிரக்யான்’ ரோவர் வாகனமும் பத்திரமாக நிலவின் தரைப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

தரை இறங்கிய இடத்தில் இருந்தபடி லேண்டரும், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ரோவரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ரோவரில் உள்ள லிப்ஸ் சாதனம் மூலம், நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் உள்ளிட்ட பல்வேறு தனிமங்கள் இருப்பதை இஸ்ரோ கண்டறிந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ரோவரில் உள்ள லிப்ஸ் (Laser-Induced Breakdown Spectroscope-LIBS) ஆய்வுக் கருவியின் மூலம் தென்துருவத்துக்கு அருகே உள்ள நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் (கந்தகம்) தனிமம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான், குரோமியம் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹைட்ரஜனைக் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த லிப்ஸ் சாதனம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையத்தில் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வு தொடர்பான வரைபடத்தையும் இஸ்ரோ தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. லேண்டர், ரோவர் ஆகிய கலன்கள் வரும் செப். 3-ம் தேதி வரை நிலவில் ஆய்வு மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT