நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுபெருவிழா இன்று(ஆக.29) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழா, இன்று(ஆக.29) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மாலை 5.45 மணியளவில் பேராலய முகப்பிலிருந்து கொடி ஊர்வலம் தொடங்குகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார், தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் ஆகியோர் கொடியை புனிதம் செய்து வைக்க, கொடியேற்றம் நடைபெறும்.
பின்னர், பேராலய கலையரங்கத்தில், மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும். தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் விழாவில், பேராலயம், மாதா குளம், விண்மீன் ஆலயம், பேராலய மேல் மற்றும் கீழ் கோயில்கள் ஆகியவற்றில் நாள்தோறும், தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறும். நாள்தோறும் மாலை சிறிய தேர் பவனி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி செப்.7 இரவு 7.30 மணியளவில் நடைபெறும். தொடர்ந்து, செப்.8 காலை 6 மணியளவில் மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு கூட்டுதிருப்பலி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
விழாவை முன்னிட்டு, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில் 3,500 போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1800 கிலோ ஜெபமாலை: பெங்களூருவைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் மாதாவுக்கு அர்ப்பணிப்பதற்காக 1,800 கிலோ எடையுள்ள தேக்கால் ஆன பிரம்மாண்ட ஜெபமாலையை வேளாங்கண்ணிக்கு கொண்டு வந்துள்ளனர்.