தமிழகம்

பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் கழிப்பறைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது: சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் கழிப்பறையை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் டெண்டர் அறிவிப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளையொட்டி பேருந்துகள் நின்று செல்ல 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உணவகங்கள் உள்ளன.

அவற்றைப் பராமரிக்க, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் டெண்டர் விடப்படும். அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தருமபுரிமாவட்டங்களில் உள்ள 136 வழித்தடங்களில் உணவகம் நடத்துவதற்கான உரிமம் வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆன்லைனில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றில் குடிநீர், கழிப்பறை போன்ற சேவைகளை இலவசமாக வழங்க வேண்டும். ஆனால், இதுவரை இல்லாத வகையில், கழிப்பிடப் பராமரிப்புக்காக ஒரு நபருக்கு ரூ.5 வீதம் கட்டணம் வசூலிக்க டெண்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பலஉணவகங்களில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த, விதிகளை மீறி ரூ.5 வசூலிக்கப்படுகிறது.

அரசே கட்டணம் வசூலிக்க அனுமதித்தால், இன்னும் கூடுதலாககட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த விதியை மட்டும்திருத்தி, டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT