திருச்சியில் நேற்று நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்.படம்: ர.செல்வமுத்துகுமார் 
தமிழகம்

முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், செய்தியாளர்களிடம் கூறியது:

பல ஆண்டுகளாக சிறையில் உள்ள 37 முஸ்லிம்களை தமிழக அரசு விடுதலை செய்ய வலியுறுத்தி, செப்.9-ம் தேதி சட்டப்பேரவை நோக்கி பேரணி நடத்தப்படும். நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் இயக்கத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும். தமிழர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி தலைவராக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளரை நியமிக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஊழலுக்கு முகாந்திரம் உள்ள பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, ஊழலுக்கு எதிராக பயணம் மேற்கொள்வது முரணாக உள்ளது.

தமிழகத்தில் சாதி கலவரம் நடைபெறும் என மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் நிலை குறித்து பொதுக்குழு கூடி தீர்மானிக்கப்படும். போராடித்தான் விவசாயத்தை காப்பாற்ற வேண்டியதாக மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் உள்ளன.

விவசாயத்தை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபீக் அகமது, பொதுச் செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT