சென்னை: மத்திய கல்வி நிறுவன பணிகளுக்கு இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்கியிருப்பதற்கு மக்கள் நீதிமய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு நேற்று விடுத்த அறிக்கை: ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக் கோடு, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் தேசிய தொழில் நுட்பக் கழக கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 10 கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத அலுவலர் பணி நியமனங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பானது அண்மையில் தேசியதேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தேர்வு பெறுவதற்கு இந்தி மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கடுமையாகக் கண்டிக்கிறது. இது மத்திய அரசின் அப்பட்டமான இந்தித் திணிப்பு அணுகு முறையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியை மட்டும் தொடர்ந்து தூக்கிப் பிடித்துக் கொண்டே செல்வது நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் முயற்சியாகும்.
அதனால்தான் தமிழகம் தொடர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களுக்கு மத்திய அரசு இழைக்கும் இந்த அநீதியால், இந்த மாநிலங்களிலுள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்ற அடிப்படை புரிதலை கூட மத்திய அரசு உணர மறுப்பதேன்? மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கான அரசா?
இல்லை இந்தி பேசும் மாநிலங்களுக்கான அரசா? பல வழிகளில் இந்தியை வலிந்து திணிக்கும் அநீதிப் போக்கை இனியாவது மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.