நளினி | கோப்புப்படம் 
தமிழகம்

பாஸ்போர்ட் கோரி நளினி தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, முன்விடுதலையான நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 32 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையான நிலையில், லண்டனில் வசிக்கும் என் மகளுடன் இருக்க விரும்புகிறேன். அங்கு செல்வதற்காக பாஸ்போர்ட் கோரி ஆன்லைன் மூலமாக ஜூன் 12-ம் தேதி விண்ணப்பித்தேன். ஜூன் 14-ம் தேதி சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பித்தேன். காவல் துறை சரிபார்ப்புக்கு பிறகு பாஸ்போர்ட் வழங்கபடும் என பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

திருவான்மியூரில் தற்போது வசிக்கும் வீட்டுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி வந்த திருவான்மியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி சென்றனர். ஆனால், தற்போது வரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. எனவே காவல் துறை சரிபார்த்த விவரங்களை பாஸ்போர்ட் அதிகாரிக்கு அனுப்பி வைக்கவும், எனக்கு பாஸ்போர்ட் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், "விசாரணை நிறைவடைந்து விட்டது. விவரங்களை சரிபார்த்த அறிக்கை பாஸ்போர்ட் அதிகாரியிடம் ஆகஸ்ட் 11-ம் தேதி சமர்ப்பித்துவிட்டது" எனத் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

SCROLL FOR NEXT