சென்னை: மருத்துவத்துறையில் தமிழகம் பன்மடங்கு வளர்ந்த மாநிலமாக உள்ளது என்று மொரிசியஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கைலேஷ் குமார் சிங் ஜகுத்பால் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்த மொரிசியஸ் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கைலேஷ் குமார் சிங் ஜகுத்பால் தமிழகத்தில் மருத்துவச் சேவை கழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகள், மருந்து மற்றும் உபகரணங்கள் கொள்முதல் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குநர் எம்.அரவிந்த், மொரிசியஸ் நாட்டின் உயர் ஆணையர் (இந்தியா) தில்லம், தலைமை நிர்வாக அலுவலர் செவ்ருட்டுன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மொரிசியஸ் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கைலேஷ் குமார் சிங் ஜகுத்பாலிடம் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் செயல்பாடுகள், தமிழகத்திலுள்ள மருத்துவ கட்டமைப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.
ஆகஸ்ட் 24-ம் தேதி (இன்று) மொரிசியஸ் சுகாதாரத்துறை அமைச்சர்கள் குழு அண்ணா நகர்மருந்து கிடங்கு, எழும்பூர் மருத்துவ சேவை கழகத்தின் அலுவலகத்தை பார்வையிடுகின்றனர். ஏற்கெனவே சென்னை அகர்வால் மருத்துவமனை மற்றும் காவேரிமருத்துவமனையை பார்வையிட்டுள்ளனர்.
தமிழகத்தில் போதுமானஅளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் இதுவரை ஒப்புதல் தராமல் உள்ளார்.
மொரிசியஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கைலேஷ் குமார்சிங் ஜகுத்பால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மொரிசியல் நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பழங்காலங்களில் இருந்தே நல்ல நட்பு இருக்கிறது. எங்கள் நாட்டின் பிரதமர் ஆலோசனையின்படி தமிழகத்தில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வந்தோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் செயல்பாட்டை அறிந்து கொள்வதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்தோம். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் அமைந்தது. மருத்துவத்துறையில் தமிழகம் பன்மடங்கு வளர்ந்த மாநிலமாக உள்ளது. மருத்துவ சேவைகள் மிகச்சிறப்பாக இங்குள்ள மக்களுக்கு கிடைக்கிறது” என்றார்.