தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் 15,000 கனஅடி நீர்வரத்து

செய்திப்பிரிவு

சேலம் / தருமபுரி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று முதல் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு கடந்த 5 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 17-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரத்து 260 கனஅடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 13 ஆயிரத்து 159 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 54.70 அடியாகவும், நீர் இருப்பு 20.90 டிஎம்சியாகவும் இருந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் பாசனத்துக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் திறப்பு, நேற்று காலை விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் கனஅடி நீர் வரத்து: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த 19-ம் தேதி காலை அளவீட்டின் போது விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை அளவீட்டின்போது 13 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக மேலும் அதிகரித்தது.

SCROLL FOR NEXT