தமிழகம்

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது 18 முதல் 50 வரை: ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். குற்றப் பின்னனி இல்லாத, நன்னடத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். ரேஷன் கார்டு உடையவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு 45 நாட்கள்தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர், அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உதவுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.

ரூ.560 சிறப்பு படி: சீருடை, தொப்பி மற்றும் காலணிஆகியவை காவல் துறையால் வழங்கப்படும். இரவு ரோந்துப் பணி, பகல் ரோந்துப் பணி மற்றும் போக்குவரத்துப் பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும். பெண்களுக்கு பகல் ரோந்துப் பணி மட்டும் வழங்கப்படும். சிறப்பான முறையில் பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும்குடியரசுத் தலைவர் பதக்கம் ஆகியவை தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

தகுதி உள்ளவர்கள், "சென்னைஊர்க்காவல் படை தலைமை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை-15 (போன் - 044 2345 2441/ 2442)" என்ற முகவரியில் விண்ணப்பப் படிவங்களை இலவசமாகப் பெற்று, அவற்றைப் பூர்த்தி செய்து, வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். இவ்வாறு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT