தமிழகம்

செங்கை அரசு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் இருந்து 11 பேர் தப்பியோட்டம்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 11 சிறுவர்கள், வெள்ளிக்கிழமை இரவு தப்பிச் சென்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மீதமுள்ள 10 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருட்டு, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை, கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய சிறுவர்கள், செங்கை அரசு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 11 பேர் நேற்று முன்தினம் இரவு, பாதுகாப்புப் பணியில் இருந்த வார்டனை அறைக்குள் தள்ளி வெளியே பூட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு டவுன் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தப்பி யோடியவர்களில் ஒருவர் மட்டுமே பிடிபட்டார். மீதமுள்ள 10 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.அய்மன் ஜமால் சீர்திருத்த இல்லத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு டவுன், தாலுகா, பாலூர், படாளம் காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கடந்த 8 மாதங்களில் இங்கு நடைபெறும் 3-வது தப்பியோட்ட சம்பவம் இதுவாகும். இதையடுத்து இல்லத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT