மதுரை: மானாமதுரையில் போலீஸார் தாக்கதியதில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி உட்பட 11 பேரிடம் விசாரணை நடந்தது.
மானாமதுரை பகுதியில் 2 பேரை வெட்டிய வழக்கில் ஆகாஷ் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அப்போது, அவர் தப்ப முயன்றபோது பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில் ஆகாஷ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். சம்பவத்தின்போது பணியில் இருந்த மானாமதுரை டிஎஸ்பி ராஜா, ஆய்வாளர்கள் திலீபன், குமாரவேல்பாண்டியன் உள்ளிட்ட 11 போலீஸாரிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிவகங்கை எஸ்பி சிவபிரசாத் மூலம் அவர்களுக்கு முறையாக சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தவிடப்பட்டது.
அதன்படி, மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி ராஜா உள்ளிட்ட 11 பேரும் இன்று ஆஜராகினர். அவர்களிடம் டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்ட சிபிசிஐடி போலீஸார் தனித்தனியே விசாரித்தனர். கேள்வி, பதில் அடிப்படையில் நடந்த விசாரணையில், 11 பேர் அளித்த பதில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.