தமிழகம்

முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பழமையான புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் அலுவலகம் சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தற்போது, நிர்வாக வசதிக்காக நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் அந்த மாளிகையின் பத்தாவது தளத்தில் நடைபெற்று வருகின்றன.

புதிய அலுவலகத்தில் முதல்வரின் அறை, தனிச் செயலர்களுக்கான அலுவலகங்கள், ஆலோசனைக் கூட்ட அரங்கம், உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகளை 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டு, அதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, முதல்வர் அலுவலகத்தை அமைப்பதற்காக ரூ.11 கோடி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, இந்த பணிகளை செய்வதற்கான ஒப்பந்ததாரர்களைத் தேர்வு செய்து கட்டுமான வேலைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதுதவிர, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறைகளைப் புதுப்பிக்கும் பணிகளும் பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர் அலுவலகம் சீரமைப்பு: ஒவ்வொரு அமைச்சரின் அலுவலகமும் சுமார் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான செலவில் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT