மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்காக 5 லட்சம் சதுர அடியில் பந்தல், 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் என பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஆக.20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு, உசிலம்பட்டியில் பொதுமக்களிடம் மரக்கன்றுகளை கொடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி அறிவுறுத்தலின்படி, மதுரை விமான நிலையம் அருகே மாநாட்டுக்கான பணிகள் 65 ஏக்கரில்நடைபெறுகின்றன. 35 ஏக்கரில் சமையலறை, உணவு விநியோக மையங்கள் அமைக்கப்படுகின்றன. 25 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு பரிமாறப்படுகிறது. மாநாட்டுக்காக 3 லட்சம்சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொண்டர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பொதுச் செயலாளர் உத்தரவுப்படி, கூடுதலாக 2 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
தேசிய அளவிலான மாநாட்டுக்குகூட இந்த அளவு பெரிய பந்தல் இதற்குமுன் அமைக்கப்படவில்லை. அதேபோல், பல லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுவதும் சாதனையாகவே இருக்கும்.
மாநாட்டில் கலந்துகொள்ள சேலம், நாமக்கல் கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக திடலுக்கு வரவேண்டும்.
சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள், விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து விமான நிலை
யம் செல்லும் பைபாஸ் சாலை வழியாக வரவேண்டும். தூத்துக்குடி உள்ளிட்ட 5 தென்மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் வளையங்குளம் வழியாக திடலுக்கு வரவேண்டும்.
அனைத்து மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்காக 13 இடங்களில் 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாநாடானது, தமிழகத்தில் ஆட்சி மாற்றத் துக்கான கால்கோல் விழாவாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.