பெண் மீனவர்களுக்கு டேப் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் 
தமிழகம்

100 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 6000 மீனவப் பெண்கள் பயன்பெறும் 'பெண்கள் இணைப்பு திட்டம்'- எம்எஸ்எஸ்ஆர்எஃப் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், 100 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 6000 மீனவப் பெண்கள் பயன்பெறும் 'பெண்கள் இணைப்பு திட்டத்தை', அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.

எம்எஸ்எஸ்ஆர்எஃப் அமைப்பின் சார்பில் 'உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்காக வலிமைமிகு சிறு தானியங்கள்' என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 6 தொடங்கி இன்று (ஆகஸ்ட் 8) வரை நடைபெற்றது.

இதில், 100 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 6000 மீனவப் பெண்கள் பயன்பெறும் 'பெண்கள் இணைப்பு திட்டம்'- டாக்டர் சவுமியா சுவாமிநாதனால் தொடங்கி வைக்கப்பட்டது. மாநாட்டின் இறுதி நாளான இன்று இத்திட்டத்தை துவக்கிவைத்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து மீனவப் பெண்களுக்கு டேப்-கள் (Tabs) வழங்கப்பட்டது.

பெண்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வழிகளை அர்த்தமுள்ள வகையில் மாற்றுவதன் மூலம், அன்றாட வாழ்வில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான தீர்வுகளுக்கான உலகளாவிய அழைப்பே 'வுமன் கனெக்ட் சேலஞ்ச்' என்று விளக்கப்பட்டது.

மேலும் 'பெண்கள் இணைப்புத் திட்டத்தின்' மூலம் 100 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 6000 மீனவப் பெண்கள் பயனடைவார்கள் என்று விழாவில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்ணான ஷர்மிளா, தனது உலர் மீன் வியாபாரத்தை மேம்படுத்த இந்தத் திட்டம் எவ்வாறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் உதவியாக இருக்கும் என்பதை எடுத்துரைத்தார்.

ஒடிசா அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் அதிகாரமளிப்புத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் அரபிந்தா பதீ ஐஏஎஸ் தனது சிறப்பு உரையில், "சிறு தானியங்கள் ஒருவரின் அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாறும் என்பதற்கு 'ஒடிசா மில்லட் மிஷன்' ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

சிறு விவசாயிகளுக்கு, குறிப்பாக மானாவாரி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விவசாய வருமானத்தை ஊக்குவிப்பதற்காக சிறு தானியங்ககள் உதவும். ஒடிசா அரசாங்கம் ஒருங்கிணைந்த கொள்கைகளில் செயல்பட்டு வருகிறது மற்றும் கொள்முதல், நுகர்வு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஒடிசா மில்லட்ஸ் மிஷனை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளோம்." என்றார்.

நிகழ்ச்சியில் தனது பாராட்டு உரையை அளித்து, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பேசுகையில், “சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக 2023 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் 'மைட்டி மில்லட்ஸ்' சாம்பியனாகத் தொடர்வதற்கு இந்த இலக்கைக் கடந்து நாம் யோசிக்கக் கூடாது என்பதில்லை. 2023-க்குப் பின்னரும் இந்தக் கொள்கையை நாம் கடைபிடிக்க வேண்டும்.

சிறுதானியங்கள் ஊட்டச்சத்தை வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியவை. எனவே 2023-க்கு அப்பால் சிறு தானியங்களை மக்களுக்காக முன்னெடுத்துச் செல்லும் இலக்கில் நாம் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT