ஈரோடு: கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் திறக்க கோரியும், கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276-யை ரத்து செய்யக் கோரியும் பாசன விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் அனுமன்பள்ளி சென்னிபாளி வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கீழ்பவானி கால்வாயில் 720 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் திட்டம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்துக்குப் பிறகு பணிகள் தொடங்கப்பட்ட இடத்தில் மட்டும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படும் என்றும் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனாலும் பணிகள் தொடங்கப்பட்ட 11 இடங்களுக்கும் மேலாக பொதுப்பணித்துறை மற்றும் கட்டுமான நிறுவனம் கால்வாயின் கறைகளை சேதப்படுத்தி பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பணிகளை விரைந்து முடித்து அமைச்சர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் கூறியபடி ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட வேண்டும். மேலும் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276யை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீழ் பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அனுமன் பள்ளி சென்னிபாளி வாய்க்காலில் இன்று(ஆக.5) காலை இறங்கி 200க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை 276-யை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் படி ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறப்புக்கான ஆணையை வெளியிட வேண்டுமென முழக்கம் எழுப்பி கீழ்பவானி பாசன விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.