ஓ.பி.ரவீந்திரநாத் | கோப்புப்படம் 
தமிழகம்

ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.யின் வெற்றி செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "தனக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகாரின் பேரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார். ஆனால் இந்தத் தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நடந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், கடந்த ஜூலை 6ம் தேதி, 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். மேலும், இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் மனுதாரர் ரவீந்திரநாத் மற்றும் எதிர்மனுதாரர் மிலானி ஆகியோர் இரண்டு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால், ரவீந்திரநாத் எம்.பி பதவியை தொடரும் நிலை உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT