சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா உருவபொம்மை மீது தேசியக் கொடி போர்த்தியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை அடங்கிய சவப்பெட்டி மீது தேசியக் கொடி போர்த்தி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், குப்பன் மற்றும் அழகு தமிழ்செல்வி ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் நாத் தேவன் மற்றும் பாபு முருகவேல் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதி, "வாக்காளர்களின் அனுதாபத்தைப் பெறும் நோக்கில் மட்டுமே ஊர்வலம் நடத்தி உள்ளனர். இதை, தேசியக் கொடியை அவமதித்ததாக கருத முடியாது" என்று கூறி, மூவர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.