தமிழகம்

சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு கோட்டை பகுதியில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 4, 10 மற்றும் 13 ஆகிய 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே ஒத்திகை நடைபெறும் 3 நாட்களும் காலை 6 மணிமுதல் ஒத்திகை முடியும் நேரம் வரை கோட்டைபகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படும்.

காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, இவிஆர் சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், என்எப்எஸ் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT