மின்கம்பம் விழுந்ததில் கணுக்கால் இழந்த தனது மகனுக்கு அரசு வேலை வழங்கக்கோரி அவரது தாயார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
தமிழகம்

மதுரை | மின்கம்பம் விழுந்து கணுக்கால் இழந்த ஜூடோ விளையாட்டு வீரருக்கு அரசு வேலை: ஆட்சியரிடம் மனு

சுப. ஜனநாயகசெல்வம்

மதுரை: மின் கம்பம் விழுந்து கணுக்காலை இழந்த ஜூடோ விளையாட்டு வீரருக்கு அரசு வேலை வழங்கி அவரது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செல்வக்குமார் தலைமையில் அவரது தாயார் தீர்த்தம் ஆகியோர் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: "மதுரை கோச்சடையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தீர்த்தம் என்பவரின் மகன் ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஸ்வரன். இவர்கள் 15 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசிக்கின்றனர். ஜூலை 26-ம் தேதி ஜூடோ பயிற்சிக்கு நண்பனை அழைத்துவரச் சென்றார். அப்போது மின்வாரியத்தினர் அலட்சியத்தால் கிரேன் மூலம் மின் கம்பம் நடும்போது தவறி விழுந்ததில் பரிதி விக்னேஸ்வரன் கணுக்கால் எலும்பு நொறுங்கி சேதமடைந்தது.

தேசிய ஜூடோ விளையாட்டு வீரரான இவர் கர்நாடகா மாநிலத்தில் நடந்த போட்டியில் தமிழக அணிக்காக பங்கேற்று இந்திய அளவில் 5-வது இடம் பெற்றார். ஆக.5 ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தயாரானார். இதில் வெற்றி பெற்றால் ஆக.28-ல் டெல்லியில் நடைபெறும் ஜூனியர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் தற்போது இழந்துள்ளார்.

மேலும் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற அவரது லட்சியமும் சிதைந்தது. எனவே ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஸ்வரன் குடும்ப வாழ்வாதாரம் கருதி அரசு வேலை வழங்க வேண்டும்" என கோரியுள்ளனர்.

SCROLL FOR NEXT