ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த பச்சபாலி ஆண்டிக்காடு தோட்டம் பகுதியில், முத்துசாமி என்பவர் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார்.
இந்த பண்ணையில் தகரத்தினாலான கூடாரம் அமைத்து, ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார். நேற்று காலை பண்ணைக்கு வந்த முத்துசாமி, கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டு இருந்தார்.
அப்போது, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பண்ணை முழுவதும் தீ பரவிய நிலையில், பவானி தீயணைப்பு நிலையத்துக்கு முத்துசாமி தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், 5 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. கோழிப் பண்ணைக்கான கூடாரம் முழுமையாக எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து சித்தோடு போலீஸார் விசாரிக்கின்றனர்.