சென்னை: திருச்சியில் இன்று `வேளாண் சங்கமம்-2023' விழா தொடங்குகிறது. இதுகுறித்து வேளாண் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, முதன்முறையாக வேளாண் வணிகத் திருவிழா சென்னையில் கடந்த 8-ம் தேதி முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது. இதில்,மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட `வேளாண் சங்கமம்-20203' விழா ஜூலை 27-ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வேளாண் கண்காட்சி அரங்குகளைத் திறந்துவைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருது வழங்குகிறார். மேலும், நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்.
உயர் விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நவீனத் தொழில்நுட்பங்கள், புதிய வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கான வழிமுறைகள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்த கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், அரசின் திட்டப் பலன்களைப் பெறுவதற்கு முன்பதிவுகள் உள்ளிட்டவை வேளாண் சங்கமத்தில் இடம் பெறுகின்றன.
கண்காட்சியில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல், சர்க்கரை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று, கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர்நலம், ஆவின், கைத்தறி உள்ளிட்ட பல்வேறு துறைகள் பங்கேற்கின்றன.
இதுதவிர, நுண்ணீர்ப் பாசன நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பூச்சி மருந்து நிறுவனங்கள், வேளாண் இயந்திர நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், வங்கிகள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும், தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துகின்றன.
மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நுண்ணீர்ப் பாசனத் திட்டம் போன்ற திட்டங்களைத் தெரிந்துகெள்வது குறித்த கண்காட்சியும் அமைக்கப்படுகிறது. பழமரக் கன்று, காய்கறி விதை, நுண்ணூட்ட உரங்கள் விற்பனையும் நடைபெறும்.
கருத்தரங்குகளில் தொழில்நுட்ப வல்லுநர்கள், அனுபவம் மிக்க விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், உயர் அலுவலர்கள் பங்கேற்று, பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
மேலும், விவசாயிகள், உழவர்உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களின் விற்பனையை எளிதாக்கும் வகையில், கொள்முதல் செய்வோர்-விற்பனையாளர் சந்திப்பும் நடைபெறுகிறது.
அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, அதிக விளைச்சல் பெற்ற 3 விவசாயிகளுக்கு விருது மற்றும்ரொக்கப் பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.