தமிழகம்

வடலூரை புனித நகரமாக அறிவிக்கக் கோரி சன்மார்க்க சாதுக்கள் உண்ணாவிரதம்

க.ரமேஷ்

கடலூர்: வடலூரை புனித நகரமாக அறிவிக்கக் கோரி சன்மார்க்க சாதுக்கள் சிலர் வடலூர் சத்திய ஞான சபை எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை, சத்திய தர்ம சாலை ஆகியன உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரம் தினத்தன்று ஜோதி தரிசனமும், தை மாதத்தில் தைப்பூச ஜோதி தரிசனமும் விமர்சையாக நடைபெறும். விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம், உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொள்வார்கள். வள்ளலார் வாழ்ந்த வடலூரை மது, மாமிசம் இல்லாத புனித நகராக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி வடலூர் சன்மார்க்க சாதுக்கள் சங்கம் சார்பில் இன்று (ஜூலை.25) காலை சத்திய ஞான சபை எதிரே உள்ள தனியார் இடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தை சேர்ந்த திருப்பூர் சாது சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சாதுக்கள் அரிகிருஷ்ணன், ராஜா,சதீஷ், ராமலிங்கம், ஸ்ரீதர் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காலை 8 மணி முதல் உண்ணாவிரதம் இருந்தனர்.

இது குறித்து தகவலறிந்த வடலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சாதுக்களிடம், அனுமதி இல்லாமல் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது. உரிய அனுமதி வாங்கி உண்ணாவிரதம் இருங்கள் எனக் கூறினர். இதனையடுத்து மதியம் 12.30 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட சாதுக்கள் முறையாக அனுமதி வாங்கி மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி சென்றனர்.

SCROLL FOR NEXT