சென்னை: மணிப்பூரில் பழங்குடியின பெண்கள்பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ண மூர்த்தி, இமயா கக்கன், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜ சேகரன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் அதன் மாநிலத் தலைவர் சின்ன தம்பி தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில எஸ்சி அணித் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவுகளான இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை சார்பில் மணிப்பூர் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிராக வாயில் கருப்பு துணி அணிந்து கொண்டு, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனி ராஜா பங்கேற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.மகேந்திரன் தலைமையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சரவணன் தமிழன், பகுதி செயலாளர் விமலா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கொருக்குப்பேட்டை ரயில் நிலையப் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்தனர்.