எஸ்.ஜி.சூர்யா | கோப்புப்படம் 
தமிழகம்

பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் இடைக்கால தடை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மீது பதியபட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபையிலிருந்து வழிபட அனுமதிக்கும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அங்கு பூஜை நடத்திய தீட்சிதர் ஒருவரைத் தாக்கி பூணூலை அறுத்ததாக ‘தி கம்யூன்’ என்ற இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இரு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்படும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறி சிதம்பரம் நகர கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஜூன் 28-ம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து, செய்தி நிறுவன இயக்குனரும், தமிழக பாஜக மாநில செயலாளருமான எஸ்.ஜி.சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், "கருத்து சுதந்திரத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் முடக்கும் நோக்கிலும், இந்த வழக்கு பதியபட்டுள்ளது" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சூர்யா தரப்பில், பொதுமக்கள் யாரும் புகார் அளிக்காத நிலையில், ஆளும் கட்சி நிர்வாகத்தில் அக்கறை கொண்ட கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது காவல் துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளது என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வழக்கு தொடர்பாக 6 வாரங்களில் சிதம்பரம் காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், அதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT