தமிழகம்

கர்ப்பிணிப் பெண்கள் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியிலும் முறைகேடா? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: கர்ப்பிணிப் பெண்கள் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியிலும் ஊழல் செய்வதா? என தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக, ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தினார்கள். பட்டியலின மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய பல ஆயிரம் கோடி நிதியைப் பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பினார்கள்.

தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு 5 தவணைகளாக ரூ.14 ஆயிரம் மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தையும் கடந்த 2 ஆண்டுகளாக முடக்கி இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 1987-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்துடன் இணைந்து, 2017-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மாத்ரு வந்தனா திட்டத்தின்கீழ் 60 சதவீத நிதியை மத்திய அரசே வழங்குகிறது.

அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.257 கோடி நிதியை மத்திய அரசு வழங்கிய நிலையில், 2 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படவில்லை என செய்தி வெளியாகியுள்ளது. திமுக அரசின் இந்த மெத்தனப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்திய அரசு ஒதுக்கும் நிதி,கர்ப்பிணிகளுக்குக் கிடைக்க வில்லை என்றால் நிதி எங்கே செல்கிறது? கர்ப்பிணி பெண்கள் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியிலும் ஊழல் செய்வதா? கர்ப்பிணி பெண்களை அலைக்கழிக்கும் மெத்தனப்போக்கை திமுக அரசு விட்டுவிட்டு, உடனடியாக அவர்களுக்கான நல நிதியை வழங்க வேண் டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT