தமிழகம்

இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் அதிபர் ஜெயவர்தனே இடையே 1987ஜுலை 29-ம் தேதி 13-வது சட்டத்திருத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, ஒரே மாநில நிர்வாக சுயாட்சியுடன் கூடிய அரசு உருவாக வாய்ப்பு ஏற்பட்டதுடன், தமிழும் ஆட்சி மொழியாக்கப்பட்டது.

இலங்கை அரசு தாமதம்: இந்த சட்டத்திருத்தம்தான் இன்றுவரை இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கி வருகிறது. ஆனால், அந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு தொடர்ந்து தாமதம் செய்துவருகிறது.

அதற்கு மாறாக வளர்ச்சித் திட்டங்கள், அரசியல் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாக தமிழ்அமைப்புகள் கூட்டத்தில் அதிபர்ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். அதை தமிழ் அமைப்புகள் முழுமையாக நிராகரித்துள்ளன. மேலும், காவல் அதிகாரமின்றி 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தவும் இலங்கை திட்டமிட்டுள்ளது.

இவற்றைச் சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை தமிழர்களின் தலைவர் ஆர்.என்.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்திய சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடியை, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஜூலை 21-ம் தேதிசந்திக்கவுள்ளார். அப்போதுஇலங்கை தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT