தமிழகம்

மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து மாவட்டங்களில் நாளை ஆய்வு - தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எந்த ஒரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்று கண்காணிப்பு அலுலர்களுக்கு அறிவுறுத்திய தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, நாளை (ஜூலை 19)முதல் கட்டமாக மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்த உத்தரவிட் டுள்ளார்.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது, ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து இந்தத் திட்டத்தை முறையாக செயல்படுத்த 2023-24– ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப். 15-ம் தேதி தொடங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 7-ம் தேதி இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டஆட்சியர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் அடிப்படையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, கண்காணிப்பு அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுமுறைகளின் படி அனைத்து முன்னேற்பாடுகள், நடவடிக்கைகளை கண்காணித்து உறுதி செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் தகுதிகள் மற்றும்தகுதியின்மை, விண்ணப்பிக்கும் நடைமுறைகள், பொருளாதாரத் தகுதிகள் அரசாணையில் விரிவாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவதற்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள, கால அட்டவணை, திட்டமிடுதல் ஒருங்கிணைத்தல் மற்றும் செயலாக்கம், கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், முகாம்களை ஏற்பாடு செய்தல், முகாம் இடங்கள் தேர்வு, முகாம்நடைபெறும் நேரம் மற்றும் நாட்கள்,உடனடியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்தல், முகாம்களில் அடிப்படை வசதிகள், விண்ணப்பதாரர் காத்திருக்கும் அறைகள், பயோமெட்ரிக் சாதனங்களைப் பெற்று சரிபார்த்தல் பகிர்ந்தளித்தல், விண்ணப்பங்கள் பெறுதல் சரிபார்ப்பு மற்றும் பகிர்ந்தளித்தல், கூட்ட நெரிசல் தவிர்ப்பு ஏற்பாடுகள், காவல்துறை பாதுகாப்பு, நிழற்கூடங்கள், குடிநீர் வசதிகள், மின்சார வசதி, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள்களுக்கான வசதி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இத் திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது. திட்டப் பயனாளிகள் கண்டறியும் செயல்பாடுகள், பணி முன்னேற்றம் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், முதல் கட்டமாக 19-ம் தேதி(நாளை) கண்காணிப்பு அலுவலர்கள், அனைத்து மாவட்டங்களுக் கும் நேரில் சென்று களஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், வளர்ச்சி ஆணையர் நா. முருகானந்தம் மற்றும் துறை செயலர்கள், அதி காரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT