தமிழகம்

தக்காளி விலை மீண்டும் உயர்வு: கோயம்பேட்டில் கிலோ ரூ.120-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

சென்னை: கோயம்பேடு சந்தையில் நேற்று தக்காளி விலை கிலோ ரூ.120-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களே பூர்த்தி செய்தி வருகின்றன. அதனால், தமிழகம் அந்த மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. தற்போது விளைச்சல் குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.140 வரை விற்கப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 800 டன் தக்காளி வந்துகொண்டிருந்த நிலையில், கடந்த ஒருமாதமாக வரத்து 300 டன்னாக குறைந்திருந்தது. இது நேற்று 250 டன்னாக குறைந்துவிட்டது.

இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி, நேற்று120-ஆக உயர்ந்தது. இதர காய்கறிகளான இஞ்சி ரூ.150, பீன்ஸ் ரூ.60, பச்சைமிளகாய் ரூ.45, கருணைக் கிழங்கு ரூ.40,கேரட் ரூ.35, பாகற்காய், புடலங்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய் தலா ரூ.20, பீட்ரூட் ரூ.16, முட்டைக்கோஸ், நூக்கல் தலா ரூ.10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

ரூ.150 வரை... சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் தரத்துக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வருகிறது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT