புதுச்சேரி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். ஆனால், எதிர்க்கட்சிகளில் அனைத்துக் கட்சித் தலைவர்களுமே தங்களை பிரதமராக எண்ணிக் கொள்கின்றனர்.
மத்திய அரசின் திட்டங்களால் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்து வருவதால் நரேந்திரமோடியே மீண்டும் பிரதமராவார். அவருக்கு நிகரான தலைவராக ராகுல் காந்தி இல்லை. பலரும் கோரிக்கை விடுத்து வருவதால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும். பொது சிவில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இந்த சட்டம் குறித்து இஸ்லாமியர் உள்ளிட்டோர் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.