சென்னை: ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டையொட்டி ராமகிருஷ்ண மடத்தின் கொள்கை, நோக்கங்கள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்க நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் மடத்தின் துணைத் தலைவர் கவுதமானந்தாஜி பங்கேற்றார்.
ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டையொட்டி ராமகிருஷ்ண இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் சேவைகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் கவுதமானந்தாஜி, செயலாளர் அத்மாஷ்ரதானந்தா, மேலாளர் தர்மிஷ்டானந்தர், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கத்தில் கல்வி, உடல் நலம், மலைவாழ் மற்றும் கிராமப்புற சேவை, இயற்கைப் பேரிடர் போன்ற பல்வேறுத் துறைகளில் ராமகிருஷ்ணா மடம் கடந்த 125 ஆண்டுகளாக ஆற்றி வரும் சேவைகள் குறித்து மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றப்பட்டது. இதில், ராமகிருஷ்ண மடத்தின் கொள்கைள், நோக்கங்கள் என்னென்ன என்பது குறித்து எடுத்துரைத்து, மடத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
அப்போது, ஆசியுரை வழங்கி கவுதமானந்தாஜி கூறுகையில், ‘`இந்தியா மட்டுமின்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ராமகிருஷ்ண மடம் நிறுவப்பட்டு, அங்கு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து மனிதர்களுக்கும் உதவ வேண்டும் என்பது ராமகிருஷ்ண மடத்தின் லட்சியம்.
மக்களுக்கு செய்யும் சேவையை, கடவுளுக்கு செய்யும் சேவையாக நினைத்து செய்ய வேண்டும். மருத்துவம், கல்வி, நிவாரணம், இல்லாதவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்குவது உள்பட பல்வேறு சேவைகள் மடத்தின் மூலம் செய்யப்படுகிறது'’ என்றார்.