சென்னை: தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கதடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் தற்போது 15 அரசு சட்டக் கல்லூரிகளும், 9 தனியார் சட்டக் கல்லூரிகளும், 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப் படிப்பை வழங்கி வருகின்றன. தனியார் சட்டக் கல்லூரிகளை முறைப்படுத்த கடந்த 2018-ம்ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, அரசு சட்டக் கல்லூரிகள் உள்ள மாவட்டங்களில் தனியார் கல்லூரிகளை தொடங்க முடியாது. அரசு கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மட்டுமே தனியார் சட்டக் கல்லூரிகளை தொடங்க முடியும். இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக 11 தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் சட்டக் கல்லூரிகள், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சாதி மற்றும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையை பின்பற்றுவதில்லை. குறிப்பாக ஏழை, எளிய, விளிம்பு நிலை மாணவர்களால் குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியைப் பெற முடியாத நிலை ஏற்படும். எனவே, இனி தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அத்துடன் சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தமிழக அரசே தொடங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதி கேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் தமி்ழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்.5-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.