தமிழகம்

சென்னை | அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு: படிக்கட்டு பயணத்தால் விபரீதம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். படிக்கட்டு பயணத்தால் கோயம்பேட்டில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் சூர்யா(19). இவர், கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்து கோயம்பேடு நூறடி சாலையில் தேமுதிக அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வந்தார்.

பின்னர் வீட்டுக்குச் செல்வதற்காக அவ்வழியே வந்த மாநகர அரசு பேருந்தில் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினார். பின்னர் படிக்கட்டிலேயே நின்று பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சூர்யா இறந்தார்.

தகவல் அறிந்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சூர்யா உடலைமீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிந்துள்ள கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், பேருந்து ஓட்டுநர் சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (57) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

பேருந்து ஓட்டுநர் திடீரென பேருந்தை வேகமாக இயக்கியதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT