தமிழகம்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: மாநில அரசுகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து மாநிலங்களின் உயர்கல்வித் துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:

உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அதன் ஆசிரியர்களே முக்கிய காரணியாக விளங்குகின்றனர். கல்லூரிகளில் உகந்த கற்றல் சூழலை உருவாக்குதல், பாடத்திட்டங்கள் வடிவமைப்பு, கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டுப் பணிகளை திறம்பட செயல்படுத்துதல் மற்றும் சமூகப் பொறுப்புள்ள உறுப்பினர்களாக மாணவர்களை மாற்றுதல் ஆகிய முக்கியப் பொறுப்புகளை ஆசிரியர்களே மேற்கொள்கின்றனர்.

அதேநேரம், உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால், அவை கற்றல், கற்பித்தல் பணிகளைப் பெரிதும் பாதிக்கும். எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தகுதி உள்ளவர்களைக் கொண்டு உரிய நேரத்தில் நிரப்ப வேண்டும்.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகள் ஏற்கெனவே யுஜிசியால் வகுக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்களை யுஜிசி இணையதளத்தில் (https://www.ugc.gov.in/) பார்த்துக் கொள்ளலாம். எனவே, துறை சார்ந்த செயலர்கள், தங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்புவதை உறுதிசெய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT