இராக்கில் சிக்கியிருந்த தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 61 இந்தியர்கள் இன்று காலை தாயகம் திரும்பினர்.
இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் போர் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மோசுல் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ளன.
ஏற்கெனவே திக்ரித் நகரில் சிக்கியிருந்த இந்திய நர்சுகள் 46 பேர் இந்திய அரசின் பெரும் முயற்சிக்குப் பின்னர் தாயகம் திரும்பினர். அதன் பிறகு இராக்கின் பிற பகுதிகளில் இருந்தும் இந்தியர்கள் தொடர்ந்து தாயகம் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 61 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர்களை மாநில உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இவர்களில் 36 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் இராக்கில் பல்வேறு கம்பெனிகளில் பணி புரிந்து வந்தனர்.