சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நபார்டு வங்கியின் புதிய தலைமை பொது மேலாளராகஆர்.சங்கர் நாராயண் பொறுப்பேற்றுள்ளார்.
மேம்பாட்டு வங்கியியலில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றஇவர், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுகலைப் பட்டமும் இந்திய வங்கியாளர்கள் நிறுவனத்தின் சார்ட்டர்ட் அசோசியேட் பட்டமும் பெற்றவர்.
கேரள நபார்டு வங்கியில் தனது பணியைத் தொடங்கிய சங்கர் நாராயண், தமிழ்நாடு, ஆந்திரா,மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
மதுரை நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளராக பணியாற்றியபோது, அந்த மாவட்டத்தில் சுங்குடி சேலைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், குறு நிறுவனங்கள், நீர்வடிப் பகுதிகள் போன்றவற்றின் வளர்ச்சிக்கான பல முயற்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
தமிழ்நாடுமற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனது பதவிக் காலத்தில் கிராமப்புற உள்கட்டமைப்பு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்கல், முழுமையான வளர்ச்சிக்கான விவசாயக் கடன்களை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப் போவதாக சங்கர் நாராயண் தெரிவித்துள்ளார்.