தமிழகம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக புலம்பெயர் தொழிலாளர் கணக்கெடுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பாக தமிழக அரசு மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

வெளிமாநிலங்களான ஒடிசா, பிஹார், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகம் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

தரவுகள் கிடைப்பதில் சிக்கல்: குறிப்பாக, கட்டுமானம், ஓட்டல் தொழில்களில் அதிகளவில் வடமாநிலத்தவர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, பலர் சிறு தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதல் சம்பவங்கள், விபத்துகள் நிகழ்தல், அரசின் சிறப்பு வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றின்போது வெளிமாநில தொழிலாளர்கள் எவ்வளவு பேர் தமிழகத்தில் உள்ளனர் என்ற தரவு கிடைப்பதில் சிக்கல் உருவாகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை தொழிலாளர் துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இதற்கென இணையதள வசதி தொடங்கப்பட்டு அதில் பதிவு செய்ய வேலையளிப்போருக்கும், தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, தொழிலாளர் துறை நேரடி கணக்கெடுப்பு நடத்தும் முயற்சியையும் எடுத்துள்ளது. தொழிலாளர்களின் புலம் பெயர்வு செயல்முறைகளை புரிந்துகொள்வது, அவர்கள் செய்யும் வேலை மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலையை அறிந்துகொள்வது போன்ற நோக்கங்களுடன் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

7 மாதங்களில் முடிக்கப்படும்: குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்பான கணக்கெடுப்பும் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. 7 மாதங்களில் கணக்கெடுப்பை முடித்து தரவுகளுடன் பரிந்துரைகளை அளிக்கவும் தொழிலாளர் நலத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT