சென்னை: தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்தல் மற்றும் பணியாளர்களுக்கு கழிப்பறை, ஓய்வறை, உணவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்கும் வகையிலான சட்டத்திருத்தங்கள் ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து அமலுக்கு வந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால், அச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு, தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இச்சட்டப்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும் நிறுவன உரிமையாளர் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்துக்குள் பதிவுக்கு விண்ணப்பித்து, பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும். விண்ணப்பம் கிடைத்த பின் ஆய்வாளர் அந்த நிறுவனத்தை பதிவு செய்து, 24 மணி நேரத்தில் பதிவுச்சான்றிதழை வழங்க வேண்டும்.
வழங்காவிட்டால், பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக கருதப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களில் மாற்றம் ஏதும்செய்யும் பட்சத்தில், 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பதிவுச் சான்றிதழில் திருத்தம் செய்து புதிய சா்ன்றிதழ் வழங்கவேண்டும். ஒரு வேளை அந்த நிறுவனம் மூடப்பட்டால் 30 நாட்களுக்குள் தகவலை தெரிவித்து பதிவுச்சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.
சட்டத்திருத்தம்.. இதுதவிர, கடைகள் மற்றும்நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் அந்த சட்டமும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டப்படி, கடை அல்லது நிறுவன உரிமையாளர் பணியாற்றும் அனைவருக்கும் போதிய அளவு சுகாதாரமான குடிநீரை வழங்கவும், பராமரிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
போதிய எண்ணிக்கையில் கழிப்பறைகளை அமைக்க வேண்டும். ஓய்வறை, உணவறைகளையும் அமைத்து போதிய நாற்காலிகள், சாய்வு இருக்கைகள் போடப்பட்டிருக்க வேண்டும். முதலுதவி வசதிகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.