அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள மாளிகைமேடு பகுதியில் ஏற்கெனவே 2 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதில், மாமன்னன் ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள், சீன வளையல்கள், இரும்பு ஆணிகள் உட்பட 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து ஏப்.6-ம் தேதி 3-ம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்பணிக்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, 16 குழிகள் தோண்டப்பட்டு, 21 பணியாளர்களைக் கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த மே மாதம் செங்கற்களால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 11-ம் நூற்றாண்டில் தமிழகத்துக்கும், சீனாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் சீன பானை ஓடுகள், காசு வார்ப்பு, சுடு மண்ணால் ஆன அச்சு முத்திரை ஆகியவை அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், மாளிகைமேடு அருகேயுள்ள உட்கோட்டையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில், 6.40 மீட்டர் நீளம், 72 சென்டி மீட்டர் அகலம் கொண்ட கிரானைட் கல்தூண் நேற்று முன்தினம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்தூண் அரண்மனைக்கு பயன்படுத்தப்பட்ட தூணாக இருக்கலாம் எனவும், முழுமையாக தோண்டி எடுக்கப்பட்ட பின்னரே முழுவிவரம் தெரியவரும் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.